புதுடெல்லி:
ரூ.1,000 கோடி அளவுக்கு பினாமி சொத்துகளை குவித்துள்ளதாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் குடும்பத்தினர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறையினர், அவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் அதிரடி சோதனைகளையும் நடத்தினர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
லாலு பிரசாத்தின் மகளும், எம்.பி.யுமான மிசா பாரதியை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி அவர் ஆஜராகாமல் இருந்தார். இதற்காக அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அவர் டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் 4 மணி நேரத்துக் கும் மேலாக அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் அவரிடம் கேள்விகள் கேட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டன.அவருடைய நிதி, முதலீடுகள், அசையா சொத்துகள் பற்றியும் வருமான வரித்துறை அதிகாரிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
இதேபோன்று மிசா பாரதியின் கணவர் சைலேஷ் குமாரிடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.