செய்திகள்

திருத்தங்கலில் பீர் பாட்டிலால் தாக்கி தொழிலாளி கொலை

மது அருந்திய போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டிலால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

மாலை மலர்

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சாட்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனி, பிள்ளைமார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் வினோத் சக்கரவர்த்தி (வயது 26), கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் முருகவேல் (25), ராஜேஷ் (24), உறவினர் பிரசன்னா மற்றும் 2 பேருடன், அந்தப்பகுதியில் உள்ள மதுக்கூடம் சென்றார்.

அங்கு 6 பேரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது கை கலப்பாக மாறியது.

ஆத்திரம் அடைந்த முருகவேல், பீர் பாட்டிலைக் கொண்டு, வினோத் சக்கரவர்த்தி தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பிரசன்னா, முருகவேலை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். தகவல் கிடைத்ததும் திருத்தங்கல் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று வினோத்சக்கரவர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் முருகவேல், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். #tamilnews