புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அந்த போர் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைதியாக சிறை பிடித்தது.
பாகிஸ்தான் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அபிநந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்தியாவும் ஓய்வின்றி நேற்று முன்தினம் இரவு முதல் முப்படைகளையும் தயார்படுத்தியது.
இதனால் வேறு வழியின்றி பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்தார். அதன்படி அபிநந்தன் நேற்று இரவு 9 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நாட்டில் அனைவரும் அபிநந்தனை வரவேற்று, வாழ்த்து செய்திகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், கிரிக்கெட் வீரர் விராத் கோலி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உட்பட பல்வேறு விளையாட்டு வீரர்கள் தங்கள் பாராட்டினை சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ‘நீ விண்ணை ஆண்டு, எங்கள் இதயங்களையும் கைப்பற்றினாய். உனது கண்ணியம் மற்றும் தைரியம் எதிர்காலத்தை சிறப்பாக வழிநடத்தி செல்லும்’ என கூறியுள்ளது.
‘உங்கள் செயலுக்கு ஹீரோ என்ற சொல் அப்பாற்பட்டது. தைரியம், தன்னலமற்ற தன்மை, விடாமுயற்சி ஆகியவை நம் லட்சியத்தை கற்றுக் கொடுக்கிறது. நமது ஹீரோ தன்னம்பிக்கையினை உணர்த்தியிருக்கிறார்’ என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறுகையில், ‘வாருங்கள் எங்கள் ஹீரோ விங் கமாண்டர் அபிநந்தன். உங்கள் தைரியம் மற்றும் கண்ணியத்தினை நினைத்து நாடே உங்களுக்கு சல்யூட் செய்கிறது’ என குறிப்பிட்டார்.
அபிநந்தன் நாடு திரும்பும் முன் மிகவும் பயந்தேன். இந்தியா அதன் மகனை திரும்பப் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.