பி.சி.பட்டீல் 
செய்திகள்

முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க திட்டமா?: மந்திரி பி.சி.பட்டீல் பதில்

முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மந்திரி பி.சி.பட்டீல் பதிலளித்துள்ளார்.

மாலை மலர்

பெங்களுரு :

கர்நாடகத்தில் முதல்- மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. எடியூரப்பாவுக்கு 78 வயதாகிறது. அவர் உடல் ரீதியாக சோர்ந்துவிட்டதாகவும், அவரை மாற்றிவிட்டு, துடிப்பாக செயல்படக்கூடிய ஒருவரை முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும் என்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் சிலர் குரல் எழுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் எடியூரப்பாவை பா.ஜனதா மேலிடம் முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீலிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. அதனால் எங்கள் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தியதாக வெளியான தகவல் தவறானது. ஊரடங்கு அமலில் இருக்கும்போது இத்தகைய கூட்டம் நடைபெறுவது சாத்தியமா?.

மாநிலங்களவை மற்றும் கர்நாடக மேல்-சபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தில் ஒன்றுகூடி ஆலோசிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. கொரோனா பிரச்சினையை முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பான முறையில் கையாண்டுள்ளார். அதனால் அவர் அடுத்த 3 ஆண்டுகளும் முதல்-மந்திரியாக நீடிப்பார். குடும்ப உறுப்பினர்கள், தொகுதிகளின் பிரச்சினைகள் குறித்து மந்திரியின் கவனத்திற்கு கொண்டு வருவதில் தவறு ஒன்றும் இல்லை.

இவ்வாறு மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.