குஜராத்தில் கரையை கடந்த டவ் தே புயல் மும்பையில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. புயலால் ஏற்பட்ட சூறாவளி காற்றில் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மகாராஷ்டிராவில் மழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான ஹீரா எண்ணெய் கிணறு அருகே ஊழியர்கள் தங்குவதற்காக குடியிருப்புப் படகுகள் நிறுத்தப்பட்டு இருந்தது.
அதில் பி 305 என்ற படகில் 273 பேர் தங்கி இருந்தனர். புயல் காரணமாக வீசிய காற்றில் இப்படகு நங்கூரத்தை இழுத்துக்கொண்டு சென்றது. இதையடுத்து அதில் இருப்பவர்களை காப்பாற்ற கடற்படை கப்பல்கள் விரைந்தன. படகு எண்ணெய் கிணறு மீது மோதி தண்ணீர் உள்ளே புகுந்து மூழ்கிவிட்டது. படகு மூழ்கும் முன்பாக அதில் இருந்தவர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு கடலில் குதித்துவிட்டனர்.
அவர்களைக் காப்பாற்ற கடற்படை கப்பல்களும், கடலோர பாதுகாப்புப் படையின் ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக போராடி 184 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. டவ் தே புயலால் குஜராத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.