சென்னை:
கிண்டி ராஜ்பவனில் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 6-ந்தேதி பதவி ஏற்கிறார். அவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.
மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ், தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், நிரந்தர கவர்னரை விரைவாக நியமிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வெளியிட்டார்.
புதிய கவர்னர் ஒருவாரத்தில் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்பார் என்று தெரிகிறது. முன்னதாக 5-ந்தேதி விமானம் மூலம் சென்னை வரும் பன்வாரிலால் புரோகித்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து மறுநாள் (6-ந்தேதி) சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் பன்வாரிலால் புரோகித் புதிய கவர்னராக பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை’ என்று தெரிவித்தனர்.