தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சென்னியப்பன் பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 64). ஓய்வு பெற்ற வங்கி கணக்காளர்.
இவர் இன்று காலை அருகில் உள்ள வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் எடுத்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவரை பின் தொடர்ந்து 2 வாலிபர்கள் வந்தனர்.
வீட்டுக்கு வந்து நடராஜ் பணத்தை வீட்டில் உள்ள மேஜையில் வைத்தார்.
அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். நடராஜை பின் தொடர்ந்த வாலிபர்கள் அவரது வீட்டுக்கு வந்து முகவரி கேட்டனர். அவர் முகவரி கூறிவிட்டு வீட்டின் பின்புறம் சென்றார். அப்போது வாலிபர்கள் வீட்டில் இருந்த பணத்தை திருடிச்சென்றனர்.
இது குறித்து அறிந்த நடராஜ் அதிர்ச்சியடைந்து தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்.