செய்திகள்

சேலம் ரெயிலில் வங்கி ஊழியர் மனைவியிடம் 15 பவுன் நகை-பணம் கொள்ளை

சேலம் ரெயிலில் வங்கி ஊழியர் மனைவியிடம் 15 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்:

சென்னையை சேர்ந்தவர் ஹேமசந்திரன், தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி சவுந்தர்யா. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து சென்னை சென்ற சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது சவுந்தர்யா ஒரு கைப்பையில் 15 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் ரொக்கப்பணமும் வைத்திருந்தார்.

ரெயில் விருத்தாச்சலத்தை நெருங்கியபோது கைப்பை மாயமானதை பார்த்து சவுந்தர்யா அதிர்ச்சி அடைந் தார்.

இதையடுத்து விருத்தாச்சலம் ரெயில் நிலையத்தில் இறங்கிய ஹேமசந்திரன், சவுந்தர்யா தம்பதியினர் ரெயில்வே போலீசில் புகார் கொடுக்க முயன்றனர்.

ஆனால் நகை-பணம் கொள்ளை போன இடம் சேலம் ரெயில்வே போலீசுக்கு உள்பட்ட பகுதி, எனவே நீங்கள் அங்கு சென்று புகார் கொடுங்கள் என்று கூறி அனுப்பி விட்டதாக போலீசார் கூறினர்.

சேலம் ரெயில்வே போலீசில் கேட்டபோது, கொள்ளை நடந்தது உ ண்மை தான், கொள்ளை நடந்த இடம் விருத்தாச்சலம் ரெயில்வே போலீசுக்குட்பட்ட பகுதி அங்கு தான் புகார் கொடுத்துள்ளனர் என்று கூறினர். இதனால் அவர்கள் எங்கு புகார் கொடுத்தனர் என்பது குழப்பமாகவே உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி சேலத்தில் இருந்து சென்னை சென்ற சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில் பெட்டியின் மேற்கூரையை அறுத்து மர்ம நபர்கள் 6 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த ஒரு ஆண்டாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளை நடந்து ஓராண்டாகியும் இதுவரை எந்த ஒரு சிறு துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகிறார்கள்.

இந்த நிலையில் அதே ரெயிலில் மீண்டும் பயணியிடம் நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT