செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட் - தென்ஆப்பிரிக்காவுக்கு 331 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 331 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது வங்காளதேசம்.

மாலை மலர்

லண்டன்:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேச அணியின் தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்.

தமிம் இக்பால் 16 ரன்னிலும், சவுமியா சர்க்கார் 42 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினர்.

இந்த ஜோடி 142 ரன்கள் சேர்த்தபோது, ஷகிப் அல் ஹசன் 75 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மொகமது மிதுன் 21 ரன்னில் வெளியேறினார்.

ஓரளவு நிலைத்து நின்று ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 78 ரன்னில் அவுட்டானார். இதனால் அணியின் ரன் வேகம் குறைந்தது. தொடர்ந்து இறங்கிய மொசாடெக் ஹூசைன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களை எடுத்துள்ளது. மகமதுல்லா 46 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில்  பெலுக்வாயோ, கிறீஸ் மாரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.