செய்திகள்

புதுச்சேரியில் முழு அடைப்பு: தமிழக அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

புதுவையில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து இன்று பந்த் போராட்டம் நடைபெறும் நிலையில் புதுவை வழியாக வந்த தமிழக அரசு பஸ் மீது வாலிபர் ஒருவர் கற்களை வீசியதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கியது.

புதுச்சேரி:

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து புதுவையில் இன்று நடந்த பந்த் போராட்டத்தையொட்டி அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. அதுபோல் ஆட்டோ, டெம்போக்களும் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுவை வழியாக தமிழக அரசு பஸ் இன்று காலை கடலூருக்கு புறப்பட்டு வந்தது.

7 மணி அளவில் அந்த பஸ் புதுவை-கடலூர் சாலையில் சிங்கார வேலர் சிலை அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அந்த பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு ஓடி விட்டார். இதனால் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து டிரைவர் பஸ்சை புதுவை பஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அங்கு பயணிகளை இறக்கி விட்டு டெப்போவில் பஸ்சை நிறுத்தினார்.

பஸ்கள் ஓடாததால் துக்க நிகழ்ச்சி மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்பவர்கள் மினி வேன்களில் சென்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் 3-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.