செய்திகள்

ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் - பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஆணவ படுகொலையை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #HonourKilling

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்திஸ்-சுவேதா என்ற புதுமண காதல் தம்பதியினரை சுவேதியின் குடும்பத்தார் ஆணவ படுகொலை செய்தனர்.

அவர்களது உடல்களை கர்நாடக மாநிலம் மாண்டிய அருகே சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி காவரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுவேதாவின் தந்தை, பெரியப்பா மற்றும் உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கொலையுண்ட நந்திஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு, தீண்டாமை ஒழிப்பு மாநில செயலாளர் சாமுவேல் ராஜ் ஆகியோர் இன்று காலை சூடகொண்டபள்ளியில் அவரது வீட்டிற்கு வந்தனர்.

கொலையுண்ட நந்திஸ்-சுவேதா

இந்த ஆணவ படுகொலை நெஞ்சை உலுக்கும் வகையில் நடந்துள்ளது. இதுபோன்ற ஆணவ கொலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் சட்டமன்றத்தில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழத்தில் ஆணவ படுகொலை நடக்கவில்லை என்று கூறி உள்ளார்.

இறந்துபோன நந்திஸ் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை மட்டும் கைது செய்துள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் ஒரு கூட்டமே சதி செய்து உள்ளது. அவர்களை கண்டுபிடித்து போலீசார் கைது செய்யவேண்டும்.

ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. உடனடியாக ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT