வாலிபர் தற்கொலை 
செய்திகள்

பாகூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பாகூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பாகூர்:

பாகூர் அருகே சேலியமேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் செந்தில்நாதன் (வயது 23), கண் கண்ணாடி தொடர்பாக படித்து முடித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் செந்தில்நாதனின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவந்ததையடுத்து அவரை பெற்றோர் கண்டித்தனர். இந்தநிலையில் மணல்மேட்டில் உறவினர் இறந்து போனதையொட்டி குடும்பத்தினருடன் சிவலிங்கம் அங்கு சென்று இருந்தார். அங்கிருந்து செந்தில்நாதன் மட்டும் சேலியமேடு கிராமத்துக்கு வந்தார். அதன்பிறகு அவர் மணல்மேட்டுக்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சிவலிங்கம் சேலியமேட்டில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்த போது அங்கு செந்தில்நாதன் தூக்குப் போட்டு பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புகார் செய்யப்பட்டதன்பேரில் பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செந்தில்நாதனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.