குழந்தை கடத்தல் 
செய்திகள்

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்- போலீசார் விசாரணை

கோவை அரசு மருத்துவமனையில் 8 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கோவை:

கடலூரை சேர்ந்த தம்பதி செல்வம் - செல்வராணி. இவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில், இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இன்று பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக அவர்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் செல்வராணியிடம் பேச்சு கொடுத்தார்.

தனக்கு அனைவரையும் தெரியும் என்றும் பிறப்பு சான்றிதழ் வாங்கி தருவதாகவும் கூறி, ஒரு ஆண் குழந்தையை வாங்கி சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால், பெற்றோர் விசாரித்தபோது, குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தை கடத்தல் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார், குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.