சேலம்:
சேலம் அண்ணா பூங்கா பெரியார் மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளம் தரைப்பாலத்தின் அடியில் பிறந்து சில நாட்களே ஆன சிசு ஒன்று துணியால் சுற்றப்பட்ட நிலையில் துணிப்பையில் வைக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் துணிப்பையில் இருந்த சிசுவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இது பற்றி சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பின் போலீசார் அங்கு விரைந்து வந்து பையில் இருந்த சிசுவை வெளியே எடுத்து பார்த்தபோது அந்த சிசு உயிரோடு இல்லை என்பது தெரியவந்தது. இந்த குழந்தை மிகவும் அழகாக இருந்தது. ஆனால் சிசு உடலில் உயிர் இல்லை என்பது தெரிந்ததும் அங்கு கூடி நின்ற பொதுமக்கள் மற்றும் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இன்று காலை 9 மணி முதல் 10.45 மணிக்குள் தான் அந்த சிசுவை அங்கு வீசி சென்று இருக்கிறார்கள். இந்த சிசு வீசப்பட்டு இருந்த இடமான தரைப்பாலத்தில் இருந்து சில அடி தூரத்தில் தான் சேலம் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் பின் பகுதியில் தான் மகப்பேறு பிரிவு இயங்கி வருகிறது.
ஆகவே இங்கு பிறந்த குழந்தையை தான் தரை பாலத்தின் அடியில் யாரோ வீசி இருக்கிறார்கள் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே கடந்த ஒரு வாரம் காலமாக பிரசவத்திற்காக எத்தனை பெண்கள்? அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்தும், முக்கியமாக நேற்று முதல் இன்று வரை பிறந்த குழந்தைகள் எத்தனை? பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்ததா? என்பது குறித்த விபரங்களை கண்டறிய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் குழந்தையை யார்? வீசி சென்று இருக்கிறார்கள் என்பது குறித்து எளிதாக கண்டுபிடித்து விடலாம் என போலீசார் கருதியுள்ளனர்.
இதற்கிடையே போலீசார் மற்றொரு கோணத்திலும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கள்ளக்காதலில் இந்த குழந்தை பிறந்ததா? இதனால் தான் பெற்ற தாய் அந்த குழந்தையை கொலை செய்து அங்கு வீசி விட்டு சென்றாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. குழந்தையை அங்கு வீசி செல்ல பெற்றோர் அல்லது உறவினர்கள் யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்தும் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.