புதுடெல்லி:
உயிருள்ள குழந்தையை இறந்ததாக கூறிய விவகாரம் தொடர்பாக இரண்டு டாக்டர்களை வேலையிலிருந்து நீக்கி மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி ஷாலிமார்பாக் பகுதியில் மேக்ஸ் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 30-ம் தேதி ஒரு பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். இரட்டை குழந்தைகள் பிறக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு குழந்தை இறந்து பிறந்தது. பிறந்த இன்னொரு குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, அந்த குழந்தையும் இறந்துவிட்டதாக கூறி, மருத்துவமனை நிர்வாகம் அந்த குழந்தையின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பெற்றோரிடம் கொடுத்தனர். குழந்தையின் உடலை தகனம் செய்வதற்கு ஏற்பாடு செய்தபோது அந்த குழந்தையின் உடலில் அசைவு இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ந்தனர்.
உயிருள்ள குழந்தையை இறந்துவிட்டது என தவறாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம் மீது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. டெல்லி அரசும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், உயிருள்ள குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக இரண்டு டாக்டர்களை வேலையில் இருந்து நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உயிருள்ள குழந்தையை இறந்ததாக கூறிய டாக்டர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும், டாக்டர்கள் மேத்தா மற்றும் விஷால் குப்தா ஆகியோரை வேலையில் இருந்து நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளோம். மேலும், இந்திய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த இரண்டு டாக்டர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளது.