திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பக்கீர் (வயது 30). இவர் தனியார் குடிநீர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரஸ்மிதா ரெட்டி (28). இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளாள்.
இந்த நிலையில் ரஸ்மிதா ரெட்டி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. உடனே பக்கீர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றார். பாரப்பாளையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஆம்புலன்சில் சென்ற போது கர்ப்பிணிக்கு வலி அதிகமாக இருந்ததால் மருத்துவ உதவியாளர் முத்து கிருஷ்ணன் ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தும்படி கூறி பிரசவம் பார்த்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தாயும், சேயும் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.
துரித நேரத்தில் செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் எம்.வேல்முருகன், மருத்துவ உதவியாளரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.