செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது. இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #BabriMasjid #BabriMasjidDemolitionDay

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட சிவசேனா மற்றும் விசுவ இந்து அமைப்புகள் தீவிரமாக உள்ளன. இதற்காக சமீபத்தில் அயோத்தியில் தர்மசபை கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனால் அயோத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் அயோத்தியில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய துணை நிலை படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் மட்டுமின்றி பைசலாபாத் நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

அயோத்தியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அனைத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  #BabriMasjid #BabriMasjidDemolitionDay

SCROLL FOR NEXT