ஈரோடு:
கோபி அருகே உள்ள மணியக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் வயது (47). இவர் நேற்று காசிபாளையம் வந்தார்.
அப்போது அவர் சத்தியமங்கலம் ரோட்டை கடந்து சென்றார். அதே சமயம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் வந்த வேன் ஒன்று பண்ணாரி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வேன் எதிர்பாராத வகையில் ரோட்டை கடந்த பழனியம்மாள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டிரைவர் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார்.