செய்திகள்

அய்யலூர் சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி விலை உயர்வு

நீண்ட நாட்களுக்கு பிறகு அய்யலூர் சந்தையில் தக்காளி விலை ஓரளவு உயர்ந்ததால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கு என தனி சந்தை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் தக்காளிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை கடுமையாக வீழ்ந்து காணப்பட்டது. 16 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.150 வரையே விற்பனையானது. மேலும் வியாபாரிகளும் குறைந்தஅளவே வந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தற்போது தேவை அதிகரித்துள்ளதால் விலை ஓரளவு உயர்ந்துள்ளது.

16 கிலோ கொண்ட பெட்டி ரூ.200 முதல் ரூ.250 வரை விலைகேட்கப்படுகிறது. மேலும் வெளியூர்களிலும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கொள்முதல் செய்வதற்காக அதிகளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். ஓரளவு விலை உயர்ந்து தக்காளிகளும் விரைவில் விற்றதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். கோடை காலத்தில் தக்காளி தேவை அதிகரிக்கும் என்பதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT