அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர்.
மேலும் அங்கு சூதாடிய கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து பணம் வைத்து சூதாடியதாக சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31), முருகானந்தம் (24), சுக்கம்பட்டியை சேர்ந்த கந்தசாமி (30), குள்ளம்பட்டியைச் சேர்ந்த மணி (25), மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த தேவநாயகபாலன் (41), அம்மாபேட்டையை சேர்ந்த மனோகரன் (46), பச்சனம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (41), ஓமலூரை சேர்ந்த வெங்கடேஷ் (23) உள்பட மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 680 பறிமுதல் செய்யப்பட்டது.