உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக 3 நபர் சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான இந்த குழுவில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவினர் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
இந்நிலையில், சமரசக் குழு சரியாக செயல்படவில்லை எனக்கூறி இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரன், விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும், அதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.