லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராமஜென்ம பூமியான அயோத்தி நகரில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் தீபங்களை ஏற்றி, இசை, நடன நிகழ்ச்சிகளுடன் கடந்த ஆண்டு தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அதேவகையில், இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று அயோத்தி நகரில் சரயு நதிக்கரையையொட்டி 3 லட்சம் தீபங்களை ஏற்றி உலக சாதனையை உருவாக்க உ.பி.அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரீட்டா பகுகுனா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக கின்னஸ் சாதனை நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பியுள்ளோம். தீபாவளியன்று சரயு நதிக்கரையில் 300 அடி உயரம் கொண்ட ராமரின் சிலை நிறுவப்படும். 3 நாள் கொண்டாடப்படவுள்ள தீபாவளி விழாவில் கடந்த ஆண்டைப்போலவே கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். #AyodhyaDiwali #Guinnessrecord