செய்திகள்

அயனாவரத்தில் பியூட்டி பார்லரில் 5 பவுன் நகை கொள்ளை

அயனாவரத்தில் பியூட்டி பார்லரில் 5 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அம்பத்தூர்:

அயனாவரம் அப்பாதுரை தெருவை சேந்தவர் லாவண்யா (30). இவர் நேற்று மாலை அயனாவரம் மேட்டுத் தெருவில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார்.

அங்கு ‘பேஷ் பிலீச்‘ செய்தார். அப்போது தான் அணிந்திருந்த கம்மல் மற்றும் சங்கிலி உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகளை கழற்றி ஒரு பையில் வைத்திருந்தார்.

‘பேஷ் பிலீச்‘ முடிந்ததும் திரும்ப அணிவதற்காக நகை பையை திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த தங்க நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ‘பியூட்டி பார்’லர் பணியாளரிடம் கேட்ட போது அதுபற்றி தனக்கு தெரியாது என அவர் கூறிவிட்டார்.

இதுகுறித்து அயனாவரம் குற்ற பிரிவு போலீசில் லாவண்யா புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் பியூட்டி பார்லருக்கு வெளியே பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமிரா வீடியோவில் 50 வயது மதிக்க தக்க ஒரு பெண் நைசாக நுழைந்து பையில் வைத்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

அதை தொடர்ந்து கேமிராவில் பதிவான வீடியோ மூலம் குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT