செய்திகள்

போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார்

போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய ஆட்டோ டிரைவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மறையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது45). அவரது நண்பர் சங்கர். நண்பர்களான இருவரும் ஆட்டோ டிரைவராக உள்ளனர். சில நாட்களுக்கு முன் செல்வகுமார், சங்கரிடம் செலவுக்கு ரூ.100 கேட்டுள்ளார். அவர் ஆட்டோவில் இருந்த ஒரு பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்துள்ளார். பின்னர் அவர் வந்து பார்த்த போது ஆட்டோ பெட்டியில் இருந்த மொத்த பணமும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சங்கர் சந்தேகத்தின் பேரில் செல்வகுமார் மீது மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை இந்திராநகர் பின்புறம் உள்ள மயான பகுதி அருகே ஒரு மரத்தில் நேற்றுமுன்தினம் செல்வகுமார் பிணமாக தொங்கினார். அவரை அடித்துக்கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சில் சமரசம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.