செய்திகள்

ஜோலார்பேட்டையில் ஆட்டோக்கள் மோதி போலீஸ்காரர் பலி

ஜோலார்பேட்டையில் சஸ்பெண்டு செய்யப்பட்டதால் ஆட்டோ ஓட்டி வந்த போலீஸ்காரர் விபத்தில் பலியானார்.

மாலை மலர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை சின்ன கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் குமரேசன் (வயது 45). போலீஸ்காரர். இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு புகார் தொடர்பாக சஸ்பெண்டு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் குமரேசன் ஆட்டோ ஓட்டி வந்தார். இன்று காலையில் அவர், ஜோலார்பேட்டையில் இருந்து பயணிகளுடன் திருப்பத்தூர் நோக்கி ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் கடந்து சென்ற போது, எதிரே சந்துரு என்பவர் ஓட்டி வந்த மற்றொரு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் 2 ஆட்டோக்களும் நொறுங்கியது.

இதில் பலத்த காயமடைந்த குமரேசன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.சந்துரு படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்து வந்த, ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் குமரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.