மெல்போர்னில் நடைபெற்ற முதல் போட்டியில் 305 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து 48.5 ஓவரில் எட்டியது. பிரிஸ்பேனில் நடைபெற்ற 2-வது போட்டியில் 271 ரன்கள் என்ற இலக்கை 44.2 ஓவரில் எட்டியது. 3-வது போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது. இதில் தோல்வியடைந்தால் தொடரை இழந்து விடும் நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 4-0 எனக் கைப்பற்றியது. இதில் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயன் சிறப்பாக பந்து வீசினார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசும் நாதன் லயனுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை.
மெல்போர்னில் நடைபெற்ற முதல் போட்டியில் லெக் ஸ்பின்னர் ஆடம் சம்பா இடம்பிடித்திருந்தார். இவர் 10 ஓவரில 72 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் 2-வது போட்டியில் சம்பா நீக்கப்பட்டார். பகுதி நேர பந்து வீச்சாளர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் பிஞ்சு ஆகியோர் 10 ஓவர்கள் வீசினார்கள். இருவரும் 72 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.