நாகர்கோவில்:
ஆஸ்டின் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு பாரம்பரிய கட்டுமர மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் கட்டுமரத்தில் மீன் பிடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாரத்திற்கு இரு நாட்கள் மட்டுமே சுழற்சி முறையில் அனுமதி எனவும், மீன்பிடிக்க செல்லும் தூரம், பயன்படுத் தும் வலை, பிடிக்கப்படும் மீன் வகை ஆகியவற்றுடன், மீன் பிடிக்க செல்பவர்கள், ஆர்.சி. புத்தகம், ஆதார் அட்டை தர வேண்டும் எனக் கூறி உள்ளது.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்றால் எந்த பயனும் ஏற்படாது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி தினந்தோறும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். இது போன்று அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பில் பதிவு செய்துள்ள மீனவர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குமரியில் 44 கடலோர கிராமங்களிலும் 72 உள்நாட்டு மீனவ கிராமங் களிலும் உள்ள பலர் அமைப்பு சாரா அமைப்பில் தங்கள் பதிவை புதுப்பிக்க வில்லை.
எனவே மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து மீனவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும். மீன்பிடி தடைக்காலத்திற்கான நிதியை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலத்தை ரத்து செய்து, ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த உடன் அனைத்து மீனவர்களும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.