இந்தியாவின் குடியரசு தினவிழா நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் டெல்லியில் நடக்க உள்ள அணிவகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். முன்பு எப்போதும் இல்லாத வகையில், ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் தலைவர்கள் இந்த ஆண்டு பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஏசியான் - இந்தியா மாநாட்டிலும் அனைத்து தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ள மியான்மர் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகி இன்று டெல்லி வந்தடைந்தார். அவரை மத்திய இணை மந்திரி அனுப்பிரியா படேல் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். இதேபோல் சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங்-க்கும் இன்று தலைநகர் வந்தடைந்தார். அவரை மத்திய இணை மந்திரி விரேந்திர குமார் வரவேற்றார்.