திருவனந்தபுரம்:
நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்‘ படத்துக்கு பா.ஜனதா தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அப்படத்துக்கு ஆதரவாக, கேரள மாநில காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் பேசியதாவது:-
சமூக, அரசியல் கருத்துகளுடன் சினிமா எடுப்பது ஜனநாயக உரிமை. அப்படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகு, அதை எதிர்க்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், ‘மெர்சல்‘ படத் தயாரிப்பாளர்களை பா.ஜனதா மிரட்டுகிறது. இது ஏற்புடையதல்ல.
ஜி.எஸ்.டி. தொடர்பான வசனம் சரியானதுதான். ஜி.எஸ்.டி.யை பொதுமக்களும், வணிகர்களும் எதிர்ப்பதால், அதை வசனமாக வைப்பதில் தவறு இல்லை. அதை நீக்க தேவையில்லை. இப்பிரச்சினையில், நடிகர் விஜயின் மதத்தை பற்றி பா.ஜனதா பேசுகிறது. ஒருவரின் மதம் என்ன என்று பார்த்த பிறகா, நாம் சினிமாவுக்கு செல்கிறோம்?
இவ்வாறு அவர் பேசினார்.