செய்திகள்

மாமூல் கேட்டு மிரட்டி வியாபாரி மீது தாக்குதல் - அ.தி.மு.க. பிரமுகர் மீது புகார்

தரமணியில் மாமூல் கேட்டு சாலையோர டிபன் கடைகாரர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அதிமுக பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தரமணியில் சாலையோர டிபன் கடை நடத்தி வருபவர் செல்லத்துரை. இவரிடம் அ.தி.மு.க. வட்ட அவைத்தலைவர் எமநாதன் என்பவர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அவருக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரூ.15 ஆயிரத்தை செல்லத்துரை கொடுத்தார்.

இந்த நிலையில் எமநாதன் கூடுதலாக ரூ.20 ஆயிரம் மாமூல் கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டார். ஆனால் செல்லத்துரை பணம் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த எமநாதன் தனது ஆதரவாளர்களுடன் செல்லத்துரையின் டிபன் கடையை நொறுக்கி சூறையாடி சென்றுவிட்டார்.

இதுகுறித்து செல்லத்துரை கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அமைந்தகரை பிபி கார்டன் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருபவர் பிரதாப் சந்திரன். அவர் நேற்று இரவு கடையை பூட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த வினித்குமார், பிரசாந்த் ஆகிய இருவரும் பிரதாப் சந்திரனிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டினர்.

இதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் பிரதாப்சந்திரன், அவரது மனைவி பிரியங்கா, கடை ஊழியர் மகேஷ் ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் கடைக்கு வந்த வடமாநில வாலிபர் ஒரு வருக்கும் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews