அரசு டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் 
செய்திகள்

பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டர்கள் திடீர் போராட்டம்

அத்திவரதரை தரிசிக்க அடையாள அட்டையுடன் சென்ற அரசு டாக்டர் ஒருவரின் அடையாள அட்டையை போலீசார் கிழித்ததால் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க லட்சகணக்கான மக்கள் கூடுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இதையடுத்து பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து அரசு டாக்டர்கள் காஞ்சிபுரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பக்தர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அரசு டாக்டர் ஒருவர் அத்திவரதரை தரிசிக்க அடையாள அட்டையுடன் சென்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அடையாள அட்டையை கிழித்ததாக தெரிகிறது. இதை அறிந்த டாக்டர்கள் இன்று காலை சிகிச்சை அளிக்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து அரசு டாக்டர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.