அத்திவரதர் விழாவில் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு:-
1. காஞ்சிபுரத்துக்கு அதிகமான வாகனங்களும், மக்கள் கூட்டமும் வருவதால் கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அந்த பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்ல வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
2. வயது முதிர்ந்தவர்களும், மாற்றுத்திறனாளிகளும் அதிக அளவில் அத்திவரதரை தரிசிக்க வருகின்றனர். இதனால் அவர்கள் அமர்ந்தபடி செல்வதற்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.
3. பக்தர்கள் அதிகளவில் வருவதால் தூய்மைப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்த கூடுதல் துப்புரவு பணியாளர்களை பெருநகர சென்னை மாநகராட்சியில் இருந்து அனுப்ப வேண்டும்.
4. வெளியூர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும்.
5. பக்தர்கள் அதிகமாக வரிசையில் நின்று தரிசனம் மேற்கொள்வர். இதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் குடிநீர், உணவு போன்றவை சுகாதாரத்துடன், தரமாக இருக்கிறதா என்பதை பணியில் உள்ள அதிகாரிகளும், அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும்.
7. அத்திவரதர் வைபவத்துக்கான விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் நகராட்சி சிறப்பாக செய்தது. இதை கருத்தில் கொண்டு அந்த நகராட்சிக்கு ஏற்பட்ட செலவினத்தை ஈடுசெய்ய தமிழக அரசு சிறப்பு நிதி அளிக்கும்.
8. அத்திவரதர் வைபவம் நடைபெற்று நிறைவடையும் வரையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிற அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுகள் பிறப்பித்து உள்ளார்.