அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றியது. அதனை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.
இதில் அங்கு ஆட்சியில் இருந்த தலிபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இன்றும் அங்கு தலிபான்களின் கையே ஓங்கி நிற்கிறது.
தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் போராடி வருகின்றன. அதே சமயம் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இணைந்து தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகின்றன.
பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் அதே வேளையில் தலிபான்களின் பயங்கரவாத தாக்குதல்களும், ராணுவத்தின் பதிலடி தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரில் உள்ள காபூல் பல்கலைக்கழகத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானில் வெள்ளி என்பது வார இறுதி நாள் ஆகும். வழக்கறிஞர்கள் நீதிபதியாவதற்கான தகுதித்தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்ததால் வக்கீல்கள் அதிக அளவில் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.