செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு - மத்திய அரசு அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் மத்திய அரசு அதிகாரி, அவரது மனைவிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை:

சென்னையில் உள்ள மத்திய கலால் வரித்துறை அலுவலகத்தில் தணிக்கை துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் முத்துக்குமாரசாமி. இவர் 1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பணியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.40 லட்சத்து 21 ஆயிரத்துக்கு சொத்துகள் வாங்கி குவித்ததாக சி.பி.ஐ. அவர் மீதும், உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருஷ்ணாபாய் மீதும் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள 14-வது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, இருவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

சி.பி.ஐ. அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT