திருவனந்தபுரம்:
கேரளாவில் உம்மண்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது கலால்துறை மந்திரியாக இருந்தவர் கே.பாபு.
கேரளாவில் மதுக்கடைகளை மூடுவது தொடர்பான அரசின் நடவடிக்கையின் போது இவர் மதுக்கடை உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது.
இதைதொடர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பாபு மீது லஞ்சஒழிப்புதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் தனது மந்திரி பதவியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது.
முன்னாள் மந்திரி கே.பாபு மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரம் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கே.பாபு மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது உம்மண்சாண்டி உள்பட மேலும் சில மந்திரிகள் மீதும் சோலார் பேனல் ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews