செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கு: மத்திய அரசு அதிகாரி, மனைவிக்கு சிறை தண்டனை

சொத்துக்குவிப்பு வழக்கில் மத்திய அரசு அதிகாரி, மனைவிக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் உள்ள இந்திய உணவுக்கழகத்தில் துணை பொதுமேலாளராக பணியாற்றியவர் ஆர்.துரைராஜ். இவரது மனைவி சாருமதி. இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தலைமை கணக்காயர் அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார். 2002-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் துரைராஜ், வருமானத்துக்கு அதிகமாக ரூ.78.47 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு 14-வது சி.பி.ஐ. சிறப்பு செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நடராஜன் தீர்ப்பு அளித்தார். அதில், ‘சி.பி.ஐ. போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், துரைராஜூக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சாருமதிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.