செய்திகள்

தி.மு.க.-காங்கிரஸ் மீதான பழி துடைக்கப்பட்டு விட்டது: திருநாவுக்கரசர் கருத்து

பா.ஜனதாவின் பொய் பிரசாரம் முறியடிக்கப்பட்டுள்ளது எனவும் தி.மு.க. , காங்கிரஸ் மீதான பழி துடைக்கப்பட்டது எனவும் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

2ஜி வழக்கில் அனைவரையும் விடுவித்து சி.பி.ஐ. கோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். சகோதரி கனிமொழி எம்.பி., ஆ.ராசா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான தி.மு.க. மீது அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்திதான் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. அந்த பொய் பிரசாரம் முறியடிக்கப்பட்டுள்ளது. உண்மை வென்றுள்ளது.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மீது சுமத்தப்பட்ட பழி துடைக்கப்பட்டு விட்டது.

நீதி, நேர்மை, உண்மை வென்றுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.