செய்திகள்

மின்சார வசதி கேட்டு செந்துறையில் பொதுமக்கள் சாலை மறியல்

மின்சார வசதி கேட்டு செந்துறையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாலை மலர்

செந்துறை:

செந்துறை-உடையார் பாளையம் சாலையில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் முன்பு செந்துறை சித்தேரி கரையில் வசித்தனர். ஏரியில் அதிக அளவில் நீர் வந்ததையடுத்து உடையார் பாளையம் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் பட்டா வழங்கவில்லை, இதனால் மின்சாரம் பெற முடியாமல் உள்ளனர். அரசின் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கிடைத்தும் அதனை பயன்படுத்த மின் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால் மின் வசதி கேட்டு செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையுடன் பெண்கள், சிறுவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் செந்துறை இன்ஸ் பெக்டர் ராஜ்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் செந்துறை -உடையார்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.