செய்திகள்

புதுச்சேரியின் நிர்வாகி என்ற முறையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்தேன்: கிரண் பேடி

புதுச்சேரியின் நிர்வாகி என்ற முறையிலேயே மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தவிர 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக ஆளும் கட்சி நியமித்துக் கொள்வது வழக்கம். இதற்காக சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தடவை புதிய ஆட்சி அமையும்போதும் அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து கொள்வார்கள். ஆனால் இந்த தடவை முதல் முறையாக மத்தியில் ஆளும் பா.ஜ.க தனது கட்சியை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துள்ளது.

புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கும் அதிகாரம் மத்திய உள்துறைக்கு இருக்கிறது. ஆனாலும் மாநிலத்தில் ஆளும் அரசின் சிபாரிசின் பேரிலேயே நியமன எம்.எல்.ஏ.க்களை இதுவரை நியமித்து வந்தனர்.

ஆனால், இப்போது புதுவை அரசின் சிபாரிசு இல்லாமலேயே துணை நிலை ஆளுநராக உள்ள கிரண் பேடி தன்னிச்சையாக 3 பேரை நியமித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்து பரபரப்பை கிளப்பினார். இது பல்வேறு கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது தொடர்பாக கிரண் பேடி விளக்கமளித்துள்ளார். அதில், “யூனியன்

பிரதேச விதிமுறைகளின் படியே எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியின் நிர்வாகி என்ற முறையில்

அவர்களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தேன். இதில், எந்த விதிமீறலும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.