செய்திகள்

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விரைவில் ராஜினாமா

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் தனிப்பட்ட காரணங்களுக்காக பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். #ArvindSubramanian

மாலை மலர்

புதுடெல்லி:

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் அரவிந்த் சுப்ரமணியன் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மூன்றாண்டு பதவிக்காலத்தை அவர் நிறைவு செய்தாலும், மேலும் ஓராண்டு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அவருக்கு மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு வழங்க அரசு தயாராக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில், “நன்றி அரவிந்த் சுப்ரமணியன். சில நாட்களுக்கு முன்னதாக அரவிந்த் சுப்ரமணியனிடம் வீடியோ கான்பரென்ஸ் முறையில் பேசினேன். அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தினருடன் வசிக்க விரும்புவதால் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்” என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் பிறந்தவரான அரவிந்த் சுப்ரமணியன் டெல்லியில் பட்டப்படிப்பும், அகமதாபாத் ஐ.ஐ.எம்.மில் மேலாண்மை படிப்பும்,  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்சி பட்டமும் பெற்றவர் ஆவார். இவருக்கு முன்னதாக, தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், பதவிக்காலம் முடிந்ததும் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.