குடிநீர் தட்டுப்பாடு 
செய்திகள்

அருப்புக்கோட்டையில் இன்று குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்

அருப்புக்கோட்டையில் இன்று குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாலையம்பட்டி:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சரியான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என அடிக்கடி புகார்கள் எழுகின்றன. குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் நகராட்சியின் 18-வது வார்டு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் சரியாக செய்யப்படவில்லை. இது தொடர்பாக அந்தப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் குடிநீருக்காக பெண்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனே குடிநீர் வழங்க வலியுறுத்தியும் இன்று 18-வது வார்டைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் திரண்டனர்.

பின்னர் அவர்கள் அகமுடையார் மகால் பஸ் நிறுத்த ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் குறித்து தகவல் அறிந்த நகராட்சி அலுவலர் சுமதி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

SCROLL FOR NEXT