செய்திகள்

அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் விழுந்து சிறுவன் பலி

அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

அரும்பாக்கம் டாக்டர் ஆர்.கே.நகரைச் சேர்ந்தவர் முரளி. வெல்டிங் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி. இவர்களது 2 வயது மகன் ஜீவா.

நேற்று காலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த ஜீவாவை காணவில்லை. இது குறித்து அரும்பாக்கம் போலீசில் முரளி புகார் அளித்தார்.

அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை யாரேனும் கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முரளியின் வீட்டுக்கு பின்புறம் செல்லும் கூவம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள மரத்தின் அருகே ஜீவா பிணமாக மிதந்தான்.அவனது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் சிறுவன் ஜீவா விளையாடிக் கொண்டிருந்த போது கூவம் ஆற்றில் தவறி விழுந்து இறந்திருப்பது தெரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.