சென்னை உயர்நீதிமன்றம் 
செய்திகள்

அரியர்ஸ் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்

அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதை விசாரணைக்கு ஏற்றது சென்னை உயர்நீதிமன்றம்.

மாலை மலர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது.

அதேபோன்று கல்லூரி தேர்வகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வைத் தவிர மற்ற கல்லூரி தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், அரியர்ஸ் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்தது.

ஒரு பக்கம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபக்கம் விமர்சனம் எழும்பியது. இதற்கிடையில் அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதற்கிடையில் விரும்பினால் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.