ஸ்ரீநகர்:
காஷ்மீரின் தெற்கு பகுதியில் ஷோபியான் மாவட்டத்தில் ஹெர்பியான் பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவர் குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராணுவ அதிகாரி பெயர் உமர்பயாஸ். குல்காம் மாவட்டத்தில் ராணுவத்தில் லெப்டினன்ட் தகுதி அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
ஷோபியானில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உமர்பயாஸ் சென்றார். இந்த நிலையில் அவர் குண்டு காயங்களுடன் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்று இருக்கலாம் என்று பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியில் தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள்.
பாதுகாப்பு படையினர் ராணுவ அதிகாரி உடலை மீட்டு ஸ்ரீநகருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சமீபத்தில் பாகிஸ்தான் படையினர் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஆகியோரை கொன்று உடலை சிதைத்து வீசினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.