ராணுவ வீரர் மணி 
செய்திகள்

கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டு கோவையில் ரூ.25 கோடி மோசடி - ராணுவ வீரர் கைது

கோவையில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்ட ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

கோவை:

கோவை போத்தனூர் அருகே உள்ள கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி கிளாரா வின்னரசி(வயது34). இவர் ராணுவத்தில் நர்சாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் மணி(44). இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

இந்தநிலையில் மணி கிளாரா வின்னரசியிடம் நீங்கள் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் தந்தால் அதற்கு நான் மாதந்தோறும் ரூ.22 ஆயிரத்து 500 தருவேன். மேலும் 3 மாதத்தில் உங்கள் பணம் முழுவதையும் தந்துவிடுவேன் என்று கூறினார்.

இதை நம்பிய கிளாரா வின்னரசி 3 தவணையாக மணியிடம் ரூ.5லட்சத்து 20 ஆயிரம் கொடுத்தார். ஆனால் பல மாதங்களாக மணி பணம் கொடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த கிளாரா வின்னரசி சம்பவம் குறித்து கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் டி.எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மணியின் கவர்ச்சிகரமான அறிவிப்பு நம்பி ஏராளமானோர் பணம் கொடுத்தனர். ஆனால் அவர் அந்த பணத்தை வாங்கி கொண்டு திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் இதேபோல் திருப்பூர், கோவை, ஈரோடு, ஊட்டி, குன்னூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பணியில் உள்ள ராணுவ வீரர்கள் உள்பட ஏராளமானோரிடம் ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவருக்கு குன்னூரை சேர்ந்த மஞ்சுநாதா என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மணியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மஞ்சுநாதாவை வலை வீசி தேடி வருகின்றனர்.