செய்திகள்

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரு பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி எல்லைகோட்டுப் பகுதியில் நேற்று பின்னிரவு எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இருளை சாதகமாக பயன்படுத்தி இன்று அதிகாலை துலஞ்சா உரி வழியாக சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.

அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருவரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.