பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் அடிக்கடி ஊடுருவி அங்கு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊடுருவலை தடுப்பதற்காக எல்லையில் இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி ரன்பிர் சிங் நேற்று ஜம்முவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காஷ்மீருக்கு உள்ளேயும், வெளியேயும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது:-
தற்போதைய நிலையில் காஷ்மீருக்குள் சுமார் 200 முதல் 300 வரையிலான பயங்கரவாதிகள் உள்ளனர். பாகிஸ்தான் ஆதரவுடன் இந்த பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்காக அவர்கள் இயங்கி வருகின்றனர்.
ஆனால் எந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களை தடுத்து அழித்து எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு நாங்கள் திறமையுடனும், தயாராகவும் இருக்கிறோம். இதைப்போல காஷ்மீரில் அமைதியும், இயல்பு நிலையும் நீடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே எங்கள் பணியாகவும் இருந்து வருகிறது.
இவ்வாறு ரன்பிர் சிங் கூறினார்.