லடாக்:
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன. அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற ஒப்புக்கொண்டுள்ளன.
இந்நிலையில், இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, எல்லைப் பகுதியை பார்வையிடுவதற்காக நேற்று லடாக் சென்றார். லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இன்று கிழக்கு லடாக் எல்லை பகுதியில் உள்ள முகாமை ராணுவ தளபதி பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது சீனாவுடன் போராடிய வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து, பேட்ஜ்களை அணிவித்தார். இதேபோல் தொடர்ந்து உற்சாகமாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.