கோப்புப்படம் 
செய்திகள்

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணி - நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணி வழங்குவதற்கான முறையான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்த நிலையில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்திய ராணுவத்தில் ஆண்களை போல பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணி, பதவி உயர்வு போன்றவற்றை வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்து இருந்தது. அதன்படி பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணி வழங்குவதற்கான முறையான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. இதற்காக பெண் வீரர்களுக்கான பரிசோதனை நடவடிக்கைகள் ராணுவ தலைமையகத்தில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் மூத்த பொது அதிகாரி மற்றும் பிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள ஒரு பெண் அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழு செயல்பட்டு வருகிறது.

இந்த தேர்வு நடவடிக்கைகள் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த தேர்வு நடவடிக்கைகளை பெண் அதிகாரிகள் பார்வையாளர்களாக நேரில் கண்டறியலாம் என ராணுவ செய்தி தொடர்பாளர் அமன் ஆனந்த் தெரிவித்தார்.

இதில் தேர்வாகும் பெண் அதிகாரிகள் நிரந்தர பணியை பெற முடியும். எனினும் அதற்கான உடல் தகுதி தேர்வில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் எனவும் அவர் கூறினார்.