செய்திகள்

அரசு கேபிள் டி.வி.யில் 125 ரூபாய் கட்டணத்தில் 200 சேனல் பார்க்கலாம்

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் 125 ரூபாய் கட்டணத்தில் 200 சேனல்கள் பார்க்கும் வகையில் செட்டாப் பாக்ஸ் வழங்குவதற்கு கேபிள் டிவி நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை மத்திய தொலை தொடர்பு ஆணையமான ‘டிராய்’ வழங்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் டிஜிட்டல் கேபிள் டி.வி. சேவையை விரைந்து வழங்குவதற்காக 70 லட்சம் ‘செட்டாப் பாக்ஸ்’ கொள்முதல் செய்வதற்காக 6-5-17 அன்று உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் சேவை மூலமாக, தனியார் நிறுவனங்களை விட அதிக சேனல்களை தரவும் அரசு கேபிள் டி.வி. முடிவு செய்துள்ளது. இதனால் தற்போதைய கட்டணம் 70 ரூபாய் இரு மடங்காக உயருகிறது.

இது தொடர்பாக கேபிள் டி.வி. அதிகாரிகள் கூறியதாவது:-

கேபிள் வாடிக்கையாளர்களுக்கு 130 ரூபாயில் மாத கட்டணத்தில் குறைந்தது 100 சேனல்கள் தர வேண்டும் என்று டிராய் அறிவித்துள்ளது.

அதற்கு மேல் சேனல்களை பார்க்க விரும்பினால் கூடுதல் செலவு செய்து அதிக சேனல்களை பெறலாம்.

இதன் அடிப்படையில் அரசு கேபிள் டி.வி. வாடிக்கையாளர்களுக்கு 130 ரூபாய்க்குள் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் 125 ரூபாயாக கட்டணம் நிர்ணயித்து 200 சேனல்களை பார்க்கும் வகையில் செட்டாப் பாக்ஸ் வழங்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம். ஜூலை 15-ந்தேதிக்குள் டிஜிட்டல் சேவை மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.